தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலினி என்று மூன்று அசுரர்கள் இருந்தனர்.
அவர்களுடைய அன்னை அவர்களின் நலனுக்காகப் பரமசிவனை நோக்கித் தவம் செய்தாள். பரமசிவன் அவளுக்குக் காட்சி தந்து “உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.
அவள் “ ஐயனே, என்னுடைய மூன்று புத்திரர்களும் என்றும் அழியாதிருக்க வரம் தர வேண்டும்” என்று கேட்டாள்.
சிவபெருமான், “அது முடியாத காரியம்; வேறு எந்த வரமாவது கேள்” என்றார்.

அவள், “சுவாமி, அப்படியானால் இரும்பு, வெள்ளி, பொன் இவற்றிலான மதில்களை உடைய மூன்று புரங்களை அளிக்க வேண்டும். அவை மூன்றும் அவர்கள் நினைத்தால் நினைத்த இடத்திற்கு ஆகாய வழியே போய் இறங்க வேண்டும். அவர்களை அழிக்க வேண்டுமானால் மூன்று புரங்களும் எப்போது ஓரிடத்தில் சேருகிறதோ அப்போது ஒரு நொடியில் எவனாவது அவர்களை அழிக்க வேண்டும். இப்படி வரம் வேண்டும்" என்று கேட்டாள்.
சிவபெருமான் “அப்படியே தந்தோம்” என்று வரம் தந்து மறைந்தார்.
ஈஸ்வரன் தந்த வரத்தின்படியே அசுரர் மூவரும் மூன்று புரங்களைப் பெற்றனர்.
அவை மூன்றும் அவர்கள் நினைத்த இடத்திற்கு ஆகாய வழியில் சென்று இறங்கின.
துன்புறுத்தினர். அவர்களை எதிர்த்து சண்டை செய்ய ஒருவரும் இ இதனால் அவர்கள் கர்வம் கொண்டு தேவர்கள் எல்லோரையும் முன்வரவில்லை.
மேலும் அவர்கள் தங்களது புரங்களுடன் திடீரென்று இறங்குவதால் பல ஊர்கள் அப்படியே அழிந்து போயின.
இப்படிப்பட்ட பாதகர்களை ஒழித்துவிடவேண்டும் என்று தேவர்கள் தீர்மானித்தார்கள்.
அவர்களால் இந்தக் கொடியவர்களை என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாததால் எல்லோரும் சேர்ந்து சிவபெருமானிடம் போய் தங்களைக் காப்பாற்ற வேண்டினர்.

சிவபெருமான் எல்லாம் வல்லவர் என்றாலும், “எனக்கு ரதமா, குதிரையா, படையா என்ன துணை இருக்கிறது? அவை இல்லாமல் நான் அவர்களை எப்படி சண்டை செய்வது ? வெல்வது ?” என்று கேட்டார்.
அதைக் கேட்டதும் தேவர்களெல்லோரும் “ எப்படித் தங்கள் திருவுள்ளமோ அப்படி நடக்கிறோம்” என்றார்கள்.
சிவபெருமான் உடனே பூமியைத் தனது தேராகக் கொண்டார். சூரிய, சந்திரர் இருவரையும் இரண்டு சக்கரங்களாகக் கொண்டார். நான்கு வேதங்களையும் நான்கு குதிரைகள் ஆக்கினார். பிரம்மதேவர் சாரதியானார்.
ஈசன் மேருமலையை வில்லாக்கிக் கொண்டார். ஆதிசேஷன் நாண் ஆனான். திருமால் பாணமானார். அக்னி பாணத்தின் சிகை ஆனார்.
இப்படியாகச் சிவபெருமான் சண்டைக்கு எழுந்தார்.

அப்பொழுது தேவர் எல்லோரும் தம்மாலேயே திரிபுரம் அழியப் போவதாக எண்ணிக் கர்வம் கொண்டனர்.
சிவபெருமான் அந்தச் சமயம் பார்த்து வில்லின் நாணை இழுத்துக் குணத்தொனி செய்தார். அந்த ஓசை கேட்டு எல்லோரும் நடுங்கினர். உலகமெல்லாம் நிலை குலைந்தன.
அசுரர் மூவரும் அஞ்சி ஓரிடத்தில் தத்தம் புரங்களோடு ஒன்று கூடினர்.
இதுதான் சமயம் என்று கண்ட சிவபெருமான் அந்த மூன்று புரங்களை நோக்கி நகைத்தார். நகைத்த மாத்திரத்தில் மூன்று புரங்களும் எரிந்து சாம்பலாயின.
இதனால் சிவபெருமானுக்கு
திரிபுரசம்ஹாரன் என்று பெயர்களுண்டாயின. திரிபுரதகனன்,
தேவரெல்லாரும் பிறகு கர்வம் நீங்கி சிவபெருமானை வணங்கி தத்தம் இடத்துக்குச் சென்றனர்.
Discussion (3)
Excellent explanation, thanks for sharing.
நன்றி! எனது சந்தேகங்கள் தீர்ந்தன.
மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.